சிறுபான்மை இனத்தை பாதிக்கும் தேர்தல் வியூகங்களுக்கு முன்மொழியப் போவதில்லை – ரிஷாத்
பிரதானமாக இரண்டு கட்சிகளை மட்டுமே மையப்படுத்திய அரசியல் கலாசார நடைமுறையை ஏற்படுத்தும் தேர்தல் முறை முன்மொழிவை ஒருபோதும் ஏற்கமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் உறுதியளித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்றுக் காலை இடம்பெற்ற சிறுபான்மை இன, சிறு கட்சிகளுடனான சந்திப்பு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கூறுகையில்; மாதுளுவாவே சோபித தேரரை நாங்கள் நேற்று முன்தினம் சந்தித்தோம். அதன் போது 20வது தேர்தல் திருத்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீளப்பெறுமாறும் அதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியிருந்தோம். அத்தோடு ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்காக ஆதரவாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட கட்சிகளை புறம் தள்ளும் விதமாகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் முறை அமைந்துள்ளது.
ஆகவே குறித்த தேர்தல் முறை மாற்றம் தொடர்பான யோசனையையும் வர்தமானி அறிவித்தலையும் முற்றாக நிராகரிக்கின்றோம் என ஏகோபித்து தெரிவித்தோம்.
அதற்கமைவாக மாதுளுவாவே சோபித தேரர் எமது நிலைப்பாடுகளை பூரணமாக ஏற்றுக்கொண்டு எமது நிலைப்பாட்டை ஆதரித்தவராக அது தொடர்பில் அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது எமக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அதன் தொடர்ச்சியாக இன்று (நேற்று) காலை பிரதமரை சந்தித்து குறித்த 20 தொடர்பில் தெளிவாக கலந்துரையாடினோம். குறித்த சட்ட மூலம் தொடர்பாக எமது நிலைப்பாட்டையும் ஆதங்கங்களையும் செவிமடுத்த பிரதமர் எமது கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார்.
அனைத்துக் கட்சி ஒன்றிணைந்த அரசியல் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் எந்தவொரு யோசனையையும் தானோ தனது தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியோ ஏற்றுக் கொள்ளப்போவதில்லையென அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனை நாம் வரவேற்பதுடன் தொடர்ச்சியாக இந்த விடயங்கள் தொடர்பில் பேசவுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஒருபோதும் சிறுபான்மை இனத்தை பாதிக்கும் எந்தவொரு தேர்தல் முன்மொழிவுக்கும் நாம் துணை போகப் போவதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.