ஆஸி அணிக்கு எதிரான T-20 போட்டித் தொடரை இலங்கை அணி கைப்பற்றியமையின் பின்னணியில் பிரதமர்…
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T-20 போட்டித் தொடரை இலங்கை அணி கைப்பற்றியதற்கான மூல காரணம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகளைக் கொண்ட T-20 போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி, தொடரைக் கைப்பற்றியுள்ளது.
நாளை(22) 3வதும் இறுதியுமான போட்டி அடிலெய்டில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டியமைக்கான காரணம் என்ன என்பதனை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
அவுஸ்திரேலிய பிரதமர் அணிக்கும் இலங்கைப் பிரதமர் அணிக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற T-20 போட்டியின் போது இரு நாடுகளினதும் பிரதமர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரடியாக பார்வையிட்ட போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியது அதிர்ஸ்டமாகும்.
மஹிந்த ராஜபக்ஷ போட்டியை பார்வையிட்டிருந்தால் நிச்சயம் தோல்விதான்.
மஹிந்த ராபஜக்ஷ போட்டிகளை பார்வையிடச் சென்றால் என்னவாகும்? போட்டியில் இலங்கை தோல்வியடையும். அண்மையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல்லும் நாணய சுழற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நாணய சுழற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டினார்.
போட்டியிலும் இலங்கை அணி வெற்றியீட்டியது. அடுத்த போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.
இவ்வாறுதான் தலைவர்கள் இருக்க வேண்டும் செல்லும் இடமெல்லாம் வெற்றி வாகை சூடி வரும் தலைவர்கள்.
நாடும் வெற்றியடையும் அதுவே அதிர்ஸ்டம் என நலின் பண்டார தெரிவித்துள்ளார்.