பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சுலைமானின் கொலையின் சந்தேக நபர்களில் ஐவரும் மீளாய்வு மனுத் தாக்கல்…

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சுலைமானின் கொலையின் சந்தேக நபர்களில் ஐவரும் மீளாய்வு மனுத் தாக்கல்…

கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஐவரும், கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று(02) மீளாய்வு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2016.08.21 அன்று, பம்பலப்பிட்டியிலுள்ள அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து கடத்தப்பட்ட அவர், 24ஆம் திகதியன்று, மாவனெல்ல – ஹெம்மாத்தகம பிரதான வீதியின் ருக்குலுகம என்ற கிராமத்தின் பிரதான வீதிக்கருகிலிருந்த பள்ளமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கணேஷ் தினேஷ், மொஹமட் நிஷாட் மொஹமட் ரஹ்மான், மொஹமட் ரபீல் ரஹ்மான், பகீத் அஸ்லாம் மொஹமட் காசிம் மற்றும் கங்கானகே ஜனித் டில்சான் ஆகியோரே பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான சமிந்த சில்வா, பீட் கோவின்னகே ஆகியோர் பிணை மனுத்தாக்கல் செய்தனர்.

முறைப்பாட்டாளர்கள் சார்பில், சிரேஷ்ட அரச சட்டத்தரணி சுஹர்ஷி ஹேரத் ஆஜராகியிருந்தார். மீளாய்வு மனு தொடர்பில், முறைப்பாட்டாளர்களின் ஆட்சேபணையைத் தெரிவிப்பதற்கான தினமான மே 5ஆம் திகதியை அறிவித்த நீதிபதி மணிலால் வைத்தியதிலக, வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.