உங்க கண் எப்போதும் வீக்கத்துடன் இருக்கா?

உங்க கண் எப்போதும் வீக்கத்துடன் இருக்கா?

நம் மனதை படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாக இருப்பது நம்முடைய கண்கள் தான். சருமத்திற்கு, தலைமுடிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேயளவு கண்களையும் பாதுகாக்க வேண்டும்.
அதிக நேரம் கணினி பயன்படுத்தாமல் இருப்பது, சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவற்றை தவிர்த்து சில விஷயங்களையும் கடைபிடிப்பது அவசியம்.

சிலருக்கு கண்களுக்குக் வீக்கம் இருக்கும்.
வீக்கம் நம்மைச் சோர்வானவராகவும் , சோகமாக இருப்பவராகவும்,நோய்வாய்ப்பட்டவராகவும் பிறருக்குக் காட்டிவிடும். அதனை எளிதாக தீர்க்க வழிமுறைகள் என்னென்ன தெரியுமா?

சிலருக்கு பரம்பரையாகவே கண்ணுக்கு கீழ் வீக்கம் ஏற்படுவதுண்டு. வயதான காலத்தில், தோல் சுருங்குவதால் கொழுப்புகள் எல்லாம் தேங்கி கண்ணுக்கு கீழே வீக்கத்தை உண்டாக்கிடும். கண்ணுக்குக் கீழ் இருக்கும் செல்கள் தண்ணீரைத் தேக்கிவைக்கக்கூடிய ஆற்றல் உண்டு. எனவே, உப்பு அதிகமுள்ள உணவு அல்லது அலர்ஜியால் நீர் சேர்வது அதிகரித்து, அதன் காரணமாகவும் கண்ணில் வீக்கம் அதிகரிக்கும்.

நிம்மதியான தூக்கம் :

ஆழ்ந்த தூக்கம்தான் கண் வீக்கத்தில் இருந்து விடுதலை கொடுக்கும். தூங்கும் நேரம் ஒவ்வொருவருக்கும் அவரவர் பணிச்சூழல், வாழ்க்கை முறைக்கேற்ப மாறுபடும். ஆனால், ஒருவர் நாள் ஒன்றுக்கு ஏழிலிருந்து ஒன்பது மணி நேரம் வரை தூங்க வேண்டியது அவசியம். தினமும் தூங்குவதற்கான நேரத்தைத் திட்டமிட்டுக்கொண்டு அந்த குறிப்பிட்ட நேரத்திலேயே தூங்க முயற்சிக்க வேண்டும்.

ஈரம் :

குளிர்ச்சியான தட்பவெப்பநிலை வீக்கத்தைக் குறைக்கச் செய்யும். கண்ணுக்குக் கீழ் குளிர்ச்சியான ஈரத்துணியை சில நிமிடங்கள் வைத்திருக்கலாம். ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி, கண்ணுக்கு கீழ் வைக்கலாம்.

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய்த் துண்டுகளை கண்ணின் வீக்கத்துக்குப் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு, கண்களை மூடிக்கொண்டு, இமைகளின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை சில நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும். வெள்ளாரிக்காயில் இருக்கும் கேஃபிக் அமிலம் (Caffeic acid) மற்றும் ஆஸ்கார்பிக் அமிலம் (Ascorbic acid) கண்ணின் கீழ் சேரும் நீர்த் தேக்கத்தைக் குறைக்கும்.

தலையணை:

தலையை நேராக வைத்துப் படுப்பதால், புவி ஈர்ப்பு விசையில் அதிகத் தண்ணீர் கண்ணில் தேங்கிவிடும். அதனால், தலையை சற்று உயரமாக வைத்துக்கொண்டு தூங்குவது நல்லது. உயரமான தலையணை வைத்துத் தூங்கினால், காலையில் வீங்கிய கண்களுடன் கண்விழிக்க வேண்டியது இருக்காது.ஆனால் இதனை தொடர்ந்து செய்யக்கூடாது

அலர்ஜி :

அலர்ஜிகளும் கண் வீக்கத்துக்கு முக்கியமான காரணங்கள். முடிந்த வரை அலர்ஜிகள் ஏற்படுத்தும் தூசு, பூஞ்சை ஆகிய பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவர்கள் அலர்ஜிக்கு கொடுக்கும் மருந்துகளையும் பயன்படுத்தலாம்.