ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 50-வது நாளாக நீடிக்கும் போராட்டம்…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 50-வது நாளாக நீடிக்கும் போராட்டம்…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ. குமரெட்டியாபுரம் கிராம மக்களின் தொடர் போராட்டம் இன்று 50-வது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்தில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதோடு அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து அ.குமரெட்டியாபுரம் பொதுமக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பொதுமக்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே போராட்டக்குழு சார்பாக தூத்துக்குடியில் பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அ.குமரெட்டியாபுரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை அரசியல் கட்சியினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, ச.ம.க. தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

நேற்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடந்து வரும் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் மக்களோடு மக்களாக அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறிய அவர் மக்களோடு இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அருகில் உள்ள பண்டாரம்பட்டி கிராம மக்களும் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கண்டன கோ‌ஷம் எழுப்பி மனு கொடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

இதுபற்றி அ.குமரெட்டியாபுரம் பகுதி பெண்கள் ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை எங்கள் போராட்டம் நடைபெறும். மக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளை மூட வேண்டும் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எங்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அருகில் உள்ள மற்ற கிராமத்தினரும் போராட்டம் நடத்த உள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்’ என்றனர்.