கடும் காற்றுடன் கூடிய காலநிலை…

கடும் காற்றுடன் கூடிய காலநிலை…

நாட்டில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையின் காரணமாக மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரையில் காற்று வீசக்கூடுமென்று திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும், குறிப்பாக மேல், தென், மத்திய, வட,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35 – 45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காலியிலிருந்து கொழும்பு, புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் இவ்விடயத்தில் அவதானமாக செயல்படுமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடும் காற்றின் காரணமாக குருநாகல் பிரதேசத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் காற்றின் காரணமாக சுமார் 50 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்திலும் இன்று அதிகாலை இந்த காற்று வீசியுள்ளது. பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்டத்தின் இடர்முகாமைத்து மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.