உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

1982-ம் ஆண்டு அஹமதாபாத்தில் உள்ள மொதேராவில் சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டது. இங்கு 12 டெஸ்ட் மற்றும் 24 ஒருநாள் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், குறித்த இந்த மைதானத்தை இடித்து 63 ஏக்கர் பரப்பளவில் புதிய மைதானம் கட்டும்பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் முடிவடையவுள்ளதுடன் ஆரம்ப விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானம் தான் இதற்கு முன்பு பெரிய மைதானமாக இருந்தது. அங்கு 90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளன.

இதேவேளை, ரூ.700 கோடியில் அஹமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

அஹமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், இந்த மைதானத்தில் முதல் போட்டியாக ஆசிய லெவன்- உலக லெவன் அணிகள் மோதும் போட்டியை நடத்த கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கான அனுமதியை சர்வதேச கிரிக்கெட் சபையிடம் கேட்டுள்ளதாக கங்குலி தெரிவித்தார். ஐ.சி.சி. ஒப்புதல் அளித்தால் இந்த போட்டி மார்ச் மாதம் இந்த மைதானத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.