அபசரனை… என்ற வார்த்தையை கூறிய ஞானசார தேரருக்கெதிராக என்ன நடவடிக்கை?
சட்டத்தரணி சிராஸ் மன்றில் கேள்வி
முஸ்லிம் இளைஞரொருவர் சிங்கள யுவதியொருவருக்கு ‘அபசரனை’ என்ற வார்த்தையை பிரயோகித்தார் என்று குற்றம் சுமத்தி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அளுத்கமையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காரணமாக இருந்த பொதுபல சேனாவின் ஞானசார தேரர் பாணந்துறையிலிருந்து அளுத்கம வரையிலான நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் கடைகளுக்கு ‘அபசரனை’ என்றார்.
ஆனால் அவருக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என களுத்துறை நீதிவான் நீதிமன்றில் பிரதிவாதியின் சார்பில் ஆஜரான RRT அமைப்பின் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் நீதிவானிடம் தெரிவித்தார்.
அளுத்கம வன்முறைகள் தொடர்பாக முஸ்லிம்களால் களுத்துறை நீதவான் நீதிமன்றில் 54 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்ததும் இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அளுத்கமவில் முஸ்லிம் இளைஞரொருவர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு ‘அபசரனை’ என்ற வார்த்தையைப் பிரயோகித்தமைக்கு எதிராக அளுத்கம பொலிஸாரினால் களுத்துறை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணை நேற்று இடம் பெற்றது.
இவ்விசாரணையின் போதே சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மேற்குறிப்பிட்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.
அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் பொலிஸார் பாதுகாப்பிலிருந்த போது பத்திராஜ கொட பன்சலைக்கு அழைத்து செல்லப்பட்டு குருமாரினால் தாக்கி சித்திரவதை செய்யப்பட்ட பின்பே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொலிஸார் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டு மூன்றாம் தரப்பினரால் தாக்கிச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளமை சட்டத்தை மீறிய செயல் என்பதை சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் எடுத்துரைத்தார்.
களுத்துறை நீதிவான் நீதிமன்றின் நீதிபதி ஜனாபா ஆப்தீன் மேலதிக விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதேவேளை அளுத்கமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக RRT அமைப்பினால் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
களுத்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணையின் போது RRT அமைப்பின் சட்டத்தரணி சப்ராஸ் ஹம்சாவும் ஆஜராகியிருந்தார்.
(ARA.Fareel)