ஏப்ரல் 21: IS தாக்குதல் – ரிபாஸ் இற்கு 2022 வரை கடூழிய சிறை

ஏப்ரல் 21: IS தாக்குதல் – ரிபாஸ் இற்கு 2022 வரை கடூழிய சிறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையைச் சேர்ந்தவர் 36 வயதுடைய முகமது ரிபாஸ் 2004 ஆம் ஆண்டு கொழும்புவில் இருந்து வேலை நிமித்தமாக மத்திய கிழக்கு நாடான துபாய் சென்றார்.

அங்கிருந்து 2009 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் சென்னை வந்து துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்துள்ளார்.

பின்னர் கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த ரோஷன் சல்மா என்பவரை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதோடு, இவர்களுக்கு தற்போது 4 குழந்தைகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கீழக்கரையில் குடும்பத்துடன் வசித்து வந்தார் முகமது ரிபாஸ். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இவர் உள்ளிட்ட 4 பேரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2019 ஏப்ரலில் இவர் தனது நண்பர்களுடன் இணைந்து வாட்ஸ் அப் குரூப் தொடங்கி இஸ்லாத்திற்கு ஆதரவாகவும், இஸ்லாம் அல்லாதோருக்கு எதிராகவும் பிரசாரம் செய்வதுடன், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை கொலை செய்யவும் திட்டம் தீட்டி வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் குற்றங்கள் புரிந்த முகமது ரிபாஸ், வெளிநாடுகளில் வேலை நிமித்தமாத ஆட்களை சட்ட விரோதமாக அனுப்பி வந்தார். இதனை அடுத்து இவரிடமிருந்து அமைதி மற்றும் நன்னடத்தை உறுதிமொழி ஆவணம் பெறப்பட்டது.

உறுதிமொழி ஆவணத்தை மறைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு மூலம், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு சலுகைகளைப் பெற்றார்.

இது குறித்து காஞ்சிரங்குடி வி.ஏ.ஓ., கீழக்கரை பொலிஸில் புகார் அளித்தார். அதன்படி, நன்னடத்தை பிணைய காலமான 2022 நவம்பர் 19 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க கீழக்கரை தாசில்தார் வீரராஜ் உத்தரவிட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.