ஷியாம் கொலையுடன் தொடர்புடையவர்களின் குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்

ஷியாம் கொலையுடன் தொடர்புடையவர்களின் குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்

பம்பலப்பிட்டி கோடீஸ்வரர் வர்த்தகரான மொஹமட் ஷியாமை கடத்தி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் பிரதிவாதிகள் அறுவருக்கு எதிரான முறைப்பாட்டாளரின் குற்றச்சாட்டுகள் எவ்விதமான சந்தேகங்களும் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளரின் சட்டத்தரணி அயேஷா சிறிசேன தெரிவித்தார்.

முறைப்பாட்டாளரின் தொகுப்புரையை 10 நாட்களுக்குள் 55 மணிநேரம் வழங்கியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் சாட்சி விசாரணை நிறைவடைந்ததன் பின்னர் முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பிலான தொகுப்புரை ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த முறைப்பாட்டாளரின் தொகுப்புரை நிறைவடைந்ததன் பின்னர் முறைப்பாட்டாளரின் முதலாவது சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, பிரதிவாதி தரப்பு தொகுப்புரையை ஆரம்பித்தார். இந்த வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய (தலைவர்), குசலா சரோஜினி வீரவர்தன மற்றும் அமேந்தர செனவிரத்ன ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04ஆம் திகதிக்கும் அதேயாண்டு மே மாதம் 22ஆம் திகதிக்கு இடையில் கொழும்பில் வைத்து மொஹமட் பௌஸ்டீன் மற்றும் கிரிஷாந்த கோரல என்பவருடன் மொஹமட் ஷியாமுடன் கடத்திச்சென்று தொம்பேயில் வைத்து கொலை செய்ததாகவும் அவர்களுக்கு உதவியளித்ததாகவும் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

(riz)