சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்கு உதவ தயார் – சீனா

சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்கு உதவ தயார் – சீனா

(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) –  கொரோனா வைரஸ் தாக்கம் உலகையே மிரட்டிவரும் நிலையில், சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்கு உதவ தயார் என சீனா அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் வசித்து வரும் தங்கள் நாட்டினரை மீட்கும் நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் ஆரம்பித்துள்ளன.

இதற்கமைய, சீனாவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த ஜப்பானியர்கள் 206 பேரை ஏற்றிக்கொண்டு முதல் விமானம் நேற்று (29) டோக்கியோ சென்றடைந்தது.

இந்த நிலையில், இவ்வாறு மீட்பு நடவடிக்கைகளை விரும்பும் நாடுகளுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார் என சீனா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வுஹான் மற்றும் ஹுபெய் மாகாணத்தில் வசித்து வரும் அனைத்து நாட்டு குடிமக்களின் உயிரையும், நலத்தையும் பாதுகாப்பதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. அங்கிருந்து தங்கள் நாட்டினரை வெளியேற்றுமாறு எந்த நாடும் கேட்டுக்கொண்டால் சர்வதேச நடைமுறைகளின்படி அதற்கான உதவியை சீனா அளிக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸின் தாக்கம் குறையும் வரை சீனாவுக்கு விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைப்பது குறித்து பல்வேறு நாடுகள் பரிசீலித்து வருகின்றன.