திசைமாறும் வஸீம் தாஜுதீனின் படுகொலை வழக்கு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதிவான் ஷலனி பெரேரா இன்று(20) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் 500 தொலைபேசி உரையாடல்களது பகுப்பாய்வு அறிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதன்படி, சந்தேக நபர்களான சிரேஷ்ட துணை பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் முன்னாள் நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர ஆகியோர் சுகயீனமுற்றுள்ள காரணத்தினால் நீதிமன்ற முன்னிலையில் முன்னிலைப்படுத்த முடியவில்லை எனவும் அவர்களது சட்டத்தரணியினர் நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தனர்.
கொலை விவகாரம் :
கடந்த 2012 மே 17 ஆம் திகதி அதிகாலை வேளையில் வஸீம் தாஜுதீன் பயணித்த அவரது கார் நாரஹேன்பிட்டி சலிகா மைதானப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த போது அதனை அணைக்க முற்பட்டவர்கள் வழங்கியுள்ள வாக்குமூலங்கள் கிருலப்பனையில் கைப்பற்றப்பட்ட சீ.சீ.ரி.வி.காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அவரிடம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்திருந்தன.
வஸீம் தாஜுதீனின் கார் எரியும் போது அவ்விடத்துக்கு வந்த நபர் ஒருவர் அதனை அணைக்க காரை நோக்கி செல்லும் போது, அருகே போக வேண்டாம் என திஸ்ஸவை ஒத்த உருவமைப்பைக் கொண்ட நபர் ஒருவர் தெரிவித்ததாக பொலிஸாரினால் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கு மூலம் மற்றும் அந்த இடத்தில் இரு டிபண்டர் ரக வாகனங்கள் இருந்ததாகவும் அவை சிறிது நேரத்தில் மின்னல் வேகத்தில் மறைந்ததாகவும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குமூலங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் கிருலப்பனை சந்தியில் இருந்து பெறப்பட்டுள்ள சீ.சீ.ரி.வி.காட்சிகளில் பல வாகனக்கள் வஸீம் தாஜுதீனின் வாகனத்தை துரத்தும் நடவடிக்கை பதிவாகியுள்ளது.
வஸீம் தாஜுதீன் அந்த வாகனங்களிடமிருந்து தப்பி செல்ல முயற்சிக்கும் காட்சிகளும் அதனை தடுக்கும் காட்சிகளும் இவ்வாறு பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இந்த காட்சிகள் அடங்கிய இறுவட்டு தற்சமயம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் தொடர்பாடல் பிரிவினரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக் ஷவின் சிரிலிய சவிய எனும் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட டிபெண்டர் வண்டியில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக சி.ஐ.டி.க்கு கிடைத்துள்ள மிக நம்பகரமான தகவலை மையப்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
டப்ளியூ.பி. கே.ஏ. 0642 எனும் குறித்த டிபெண்டர் வண்டியில், உயிரியல் கூறுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டு, அதனை சோதனை செய்துள்ள அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள், கொலை இடம்பெற்று பல வருடங்கள் கடந்த போதும், குறித்த டிபெண்டரில் ஆய்வுகளை முன்னெடுக்க முடியுமான நிலைமையில் உயிரியல் கூறுகள் இருப்பதைக் கண்டறிந்து இற்றைக்கு அனைத்தும் வெறும் பேசுபொருளாகவே உள்ளது.
இற்றைக்கு வஸீம் தாஜுதீன் என்பது கடந்த அரசியலில் வாக்குகளை சேகரிக்கும் ஒரு ஆயுதமாக பயன்படுத்து வந்த நிலையில், அந்த அரசிலும் எவ்வித நியாயமும் எட்டப்படவில்லை. அவ்வாறு இருக்க இந்நாள் அரசு அதனை சாதகமாக்கி கொள்ள நாடகங்களை முன்னெடுத்துள்ளமை தெளிவாகின்றது.