இனவெறிக் குற்றத்துக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்

இனவெறிக் குற்றத்துக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்

(ஃபாஸ்ட் நியூஸ் | மேற்கிந்திய தீவு) – ஆட்ட நிர்ணயம், ஊக்கமருந்து ஆகிய குற்றத்தைப்போலவே இனவெறியுடன் பேசும் வீரர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஹோல்டர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 4 மாதங்களுக்க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 8ம் திகதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்கி ஜூலை 28-ம் திகதியுடன் முடிகிறது.

இந்நிலையில் ஜேசன் ஹோல்டர் மான்செஸ்டரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கையில்;

“..ஊக்கமருந்து, ஆட்ட நிர்ணயம் போன்றவற்றுக்கும், இனவெறியுடன் ஒரு வீரரை பேசுவதற்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். இனவெறியுடன் சக வீரரை ஒரு வீரர் பேசினால், அதை ஊக்கமருந்து, ஆட்ட நிர்ணயம் குற்றத்துக்கு இணையாகவே கருத வேண்டும்.

ஐ.சி.சி. விதிப்படி இனவெறிக் குற்றத்துக்கு வாழ்நாள் முழுவதும் விளையாட தடை விதிக்க வேண்டும். முதல் முறையாக குற்றம் செய்தால் 4 சஸ்பென்சன் புள்ளிகள் வழங்க வேண்டும்.

இரு புள்ளிகளுக்கு ஒரு டெஸ்ட் அல்லது இரு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை செய்யப்படுவார். அந்த அடிப்படையில் இரு டெஸ்ட் அல்லது 4 ஒரு போட்டிகளில் விளையாட தடை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு தொடருக்கும் முன்பு இனவெறிக்கு எதிரான விஷயங்களை வீரர்களிடத்தில் தெரிவிக்க வேண்டும். ஊக்கமருந்து குறித்தும், ஊழலுக்கு எதிரான விஷயங்கள் குறித்தும் போட்டித் தொடர் தொடங்கும் முன் வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுபோல் இனவெறி பேச்சு குறித்தும் கூற வேண்டும். இதன் மூலம் வீரர்களுக்கு இனவெறி பேச்சு குறித்த அதிகமான விழிப்புணர்வு களத்தில் ஏற்படும்.

கறுப்பினத்தவர்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி தீவிரமாக ஆதரவு அளிக்கும். அமெரிக்காவில் மட்டுமல்ல உலகில் எங்கு கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக இயக்கம் நடந்தாலும் அதை ஆதரிப்போம். முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதற்கான ஆதரவைத் தருவோம்..” எனவும் தெரிவித்துள்ளார்.