எதிரணியை சுழற்றிய எம்புல்தெனிய

எதிரணியை சுழற்றிய எம்புல்தெனிய

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லசித் எம்புல்தெனிய தனது டெஸ்ட் வாழ்க்கையின் சிறந்த பந்துவீச்சு சாதனையை பதிவு செய்துள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 339 ஓட்டங்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு ஒரு விக்கெட் மாத்திரம் கையிருப்பில் இருக்க இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட இலக்கை கடக்க இன்னும் 42 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உள்ளது.

இப்போட்டியில் ஓஷத பெர்னாண்டோவின் அற்புதன செயல் காரணமாக இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் மற்றுமோர் இரட்டை சதம் அடிப்பதற்கான வாய்ப்பினை நழுவ விட்டு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அதன்படி ஆடுகளத்தில் 8 மணிநேரமும் 10 நிமிடங்களும் நீடித்த அவர் மொத்தமாக 309 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டரிகள் அடங்கலாக 186 ஓட்டங்களை பெற்றார்.

அவரின் ஆட்டமிழப்பையடுத்து மூன்றாம் நாள் ஆட்டத்தை முடிவுக்க நடுவர்கள் முடிவுசெய்தனர். அதன்படி மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 114.2 ஓவர்களை எதிர்கொண்டு ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 339 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் சதம் விளாசிய ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபடியான ஓட்டங்களை குவித்த நான்காவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

99 ஆவது டெஸ்டில் விளையாடும் ரூட், 49.62 என்ற இன்னிங்ஸ் சராசரியில் 8238 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து அலெஸ்டர் குக் (12472), கிரஹாம் கூச் (8900) மற்றும் அலெக் ஸ்டீவர்ட் (8463) உள்ளனர்.

எனினும் இந்த பேட்ஸ்மேனின் சராசரி ரூட்டை விட குறைவாக உள்ளது.

மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று ஆரம்பமானபோது 2 விக்கெட் இழப்புக்கு 98 ஓட்டங்களுடன் ஜோ ரூட் மற்றும் ஜோனி பெயர்ஸ்டோ ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முன்னால் நம்பிக்கையுடன் களமிறங்கினர்.

ஆனால் சிறுதி நேரத்திலேயே பெயர்ஸ்டோவை 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார் எம்புல்தெனிய.

அதன் பின்னர் ஆடுகளம் நுழைந்தது முதல் எம்புல்தெனியாவின் கூர்மையான சுழலுடன் போராடி வந்த டான் லாரன்ஸ் மூன்று ஓட்டங்களுடன் திரிமான்னவிடம் பிடிகொடுத்தார்.

தொடர்ந்து வந்த ஒவ்வொரு பேட்ஸ்மன்களும் ஒருவர் பின் ஒருவராக எம்புல்தெனியவின் பந்து வீச்சில் சிக்கி சின்னா பின்னமாக மறுபுறத்தில் ரூட் சிக்கலான பந்துகளையும் துல்லியமாக எதிர்கொண்டு இங்கிலாந்தின் மீட்சிக்காக போராடினார்.

இதனிடையே ரூட்டின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிய ஜோஸ் பட்லரும் தனது 18 ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

இறுதியாக 114.2 ஓவர்களில் ரூட்டும் ஆட்டமிழந்து வெளியேற மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் எம்புல்தெனியா 66 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என்றிருந்த தனது முன்னைய பந்து வீச்சு செயல்திறனை 132 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற ரீதியில் இந்த இன்னிங்சில் மாற்றியமைத்தார்.

அந்த திறமையால் காலி சர்வதேச மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இது கை சுழற்பந்து வீச்சாளர் ஆனார்.

எம்புல்தெனியவின் இந்த ஏழு விக்கெட் எடுப்புகளில் லஹிரு திரிமான்னவின் பங்களிப்பும் அளப்பரியது. எம்புல்தெனியவின் பந்து வீச்சில் ஐந்து பிடியெடுப்புகளை அவர் மேற்கொண்டார்.