‘நோவாவேக்ஸ்’ தடுப்பூசி பரிசோதனையில் வெற்றி

‘நோவாவேக்ஸ்’ தடுப்பூசி பரிசோதனையில் வெற்றி

(ஃபாஸ்ட் நியூஸ் |  இங்கிலாந்து) – பிரிட்டனில் நடத்தப்பட்ட ‘நோவாவேக்ஸ்’ எனும் ஒரு புதிய தடுப்பூசி பரிசோதனையில், அது 89.3 சதவீதம் கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்திறனோடு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த மருந்து பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபுக்கு எதிராக கூடுதல் செயல்திறனோடு இருப்பதைக் காட்டி இருக்கிறது என பிபிசியின் மருத்துவ ஆசிரியர் ஃபெர்குஸ் வால்ஷ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் பிரதமர் இந்த நற்செய்தியை வரவேற்றிருக்கிறார், அதோடு நோவாவேக்ஸ் தடுப்பு மருந்தை பிரிட்டனின் மருந்து நெறிமுறையாளர்கள் மதிப்பிடுவார்கள் எனவும் கூறியுள்ளார். பிரிட்டன் இந்த புதிய நோவாவேக்ஸ் தடுப்பு மருந்திலும் 60 மில்லியன் டோஸ்களை ஆர்டர் செய்திருக்கிறது. இந்த மருந்து இங்கிலாந்திலிருக்கும் ஸ்டாக்டன் நகரில் தயாரிக்கப்படும்.

ஒருவேளை இந்த மருந்துக்கு பிரிட்டனின் மெடிசின்ஸ் & ஹெல்த்கேர் ப்ராடெக்ட்ஸ் ரெகுலேட்டரி ஏஜென்சி (பிரிட்டனின் மருந்து கட்டுப்பாட்டு முகமை) அனுமதி வழங்கினால், நோவாவேக்ஸ் உற்பத்தி செய்யப்பட்டு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக பிரிட்டன் அரசு கூறுகிறது.

ஆக்ஸ்ஃபோர்டு – ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பு மருந்து, பிஃபிசர் – பயோஎன்டெக், மாடர்னா என இதுவரை பிரிட்டன் மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.