இன்றும் நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

இன்றும் நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொவிட்-19 கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முன்னிலை வகிக்கும் துறையினர் இன்று தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். நாடளாவிய ரீதியில் இன்று(30) கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

இதன் பிரதான வைபவம் தேசிய தொற்றுநோயியல் நிறுவனமான ஐ டி எச் வைத்தியசாலையில் நேற்று(29) ஆரம்பமாகியது. கொவிட் தடுப்புக்கான முதலாவது தடுப்பூசி விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவிற்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் மக்களே, ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த பங்களிக்கும் மூன்று இராணுவ வீரர்களுக்கு முதலாவதாக தடுப்பூசி வழங்கப்பட்டது. இராணுவ நோய்த்தடுப்பு வைத்தியர் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சவீன் சேமகே, விமான நிலையத்தில் கொவிட் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பான பிரிகேடியர் லால் விஜயதுங்க மற்றும் புனானி தனிமைப்படுத்தல் நிலையத்தின் முதல் மருத்துவ அதிகாரியான வைத்தியர் பசிந்து பெரேராவுக்கும் இந்த கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது.

நேற்றைய தினம் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் இந்தியாவினால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த தடுப்பூசியானது, கொரோனா ஒழிப்புக்காக முன்னிலையில் செயற்படுகின்ற கிட்டத்தட்ட 150,000 சுகாதார ஊழியர்கள், 120,000 முப்படையினர் மற்றும் பொலிசார் உட்பட பாதுகாப்பு பிரிவினருக்கு முதலாவதாக வழங்கப்படவுள்ளது.

மேல் மாகாணத்தில் 6 பிரதான வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அமைச்சின் தொற்று நோய் தொடர்பான பிரிவின் தலைவர் டொக்டர் சுதத் சமரவீர இதனை தெரிவித்தார். தடுப்பூசி ஏற்றியமையால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாது என்றும் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.