சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ அடுத்த மாதம் ரிலீஸ்

சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ அடுத்த மாதம் ரிலீஸ்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – ‘மன்மதன்’ திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சந்தானம்.

சந்தானம் நடித்து அடுத்த மாதம் வெளியாக உள்ள படம் ‘பாரிஸ் ஜெயராஜ்’. இதில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், எடிட்டராக பிரகாஷ் பாபு, சண்டை இயக்குநராக ஹரி தினேஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மேலும், ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில், துரைராஜ் கலை இயக்கத்தில், உருவாகிய இந்தப் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் புதுமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கும் ‘சபாபதி’ படத்திலும் நடித்து வருகிறார் சந்தானம். இந்த படத்தில் சந்தானம் திக்குவாய் கேரக்டரில் நடிக்கிறார். மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கிறது.

இதனிடையே சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் “டிக்கிலோனா”. இயக்குநர் சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு அனைத்துமே முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது, படக்குழு. இத்தோடு ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகம் ‘கொரோனா குமார்’. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்ககிறார் சந்தானம்.

இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘சர்வர் சுந்தரம்’. இவர், இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக ஆயுத எழுத்து படத்தில் பணியாற்றி உள்ளார்.

இந்தப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். நடிகை வைபவி நடித்த முதல் தமிழ் படம் இது தான். இப்படத்தில் மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பட், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நாகேஷ் நடித்த பழைய ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் டைட்டிலை ஏவிஎம் நிறுவனத்தில் அனுமதிப் பெற்று, இந்தப் படத்துக்கு வைத்துள்ளார்கள். தமிழர்கள் உணவின் மேன்மையை சொல்லும் கதையை கொண்ட இந்தப் படம், உணவே மருந்து என்ற விஷயத்தை மையமாகக் கொண்டது. சென்னையில் ஆரம்பிக்கும் கதை துபாய் வரை சென்று முடிவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னையால் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல், கடந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே தேதியில் சந்தானம் நடித்துள்ள ‘டகால்டி’படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் சந்தானம் நடித்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆவதால் பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில் சர்வர் சுந்தரம் படம் ரிலீசுக்கு தயாராகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. வருகிற பிப்ரவரியில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.