பொலிகண்டி ஆர்ப்பாட்டம் சர்வதேசத்திற்கு

பொலிகண்டி ஆர்ப்பாட்டம் சர்வதேசத்திற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டம் நேற்று( 03) காலை ஆரம்பமாகி, பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் ஆகியோரின் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இன்றும்(04) இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் முழுமையான கவனத்தில் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உமைகள் பேரவையின் விசேட அறிக்கையிடும் ஆணையாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மத சுதந்திரம் குறித்த அறிக்கையாளர் அகமது ஷாஹீத் மற்றும் கலாச்சார உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் கரிமா பென்னவுன் ஆகியோரின் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த அமைதி போராட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர் இருவருக்குமான கடிதம் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர்கள் இருவரும் இவ்வாறு கூறியுள்ளனர்.

“.. அன்புமிக்க வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த பத்துக் கோரிக்கைகள் அடங்கிய சிறப்புக் கடிதமும் தகவல்களும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான இந்த போராட்டம் முழுமையான கவனத்தில் கொள்ளப்படும்.

போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர் என இவ் அலுவலகத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த ஐ.நாவின் விசேட அணிக்கான முக்கியஸ்தர் சியான் யு லிங் உறுதிப்படுத்தியுள்ளார்..” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.