முகநூலில் செய்திகள் பகிரும் வசதி முடக்கம்

முகநூலில் செய்திகள் பகிரும் வசதி முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலிய அரசின் உத்தேச சமூக ஊடகம் குறித்த சட்டம் தொடர்பில் பேஸ்புக் நிவனத்துக்கும் அவுஸ்திரேலிய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்திருந்த நிலையில் அதன் ஒரு அங்கமாக அவுஸ்திரேலியாவில் முகநூலில் செய்திகள் பகிரும் வசதி முடக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் முகநூல், கூகுள் நிறுவனங்கள் வெளியிட்டால் அதற்குரிய கட்டணத்தை ஊடக நிறுவனங்களுக்கு செலுத்த வழி வகை செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், கூகுள் மற்றும் முகநூல் போன்ற நிறுவனங்களின் 6 பில்லியன் டொலர் விளம்பர வருவாய், செய்தி நிறுவனங்களுக்குச் செல்ல நேரிடும். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முகநூல் நிறுவனம், அவுஸ்திரேலியாவில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செய்திகள் பகிரும் வசதியையே நிறுத்த போவதாக எச்சரித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் விளம்பர வருமானத்தை ஊடகங்கள் இழந்து வரும் நிலையில், ஊடங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு டிஜிட்டல் தளங்கள் வருமானம் ஈட்டி வருகின்றன. இதற்கு கடிவாளம் போடும் வகையிலேயே அவுஸ்திரேலிய அரசு புதிய சட்டம் கொண்டுவர திட்டமிட்டதாக சர்ச்சைகள் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.