செவ்வாய் முதல் பாராளுமன்ற அமர்வு

செவ்வாய் முதல் பாராளுமன்ற அமர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வை நடாத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று(18) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் 23 ஆம் திகதி, கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒத்திவைக்கட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண சட்டம் தொடர்பான ஒழுங்குவிதி குறித்த விவாதம் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் முற்பகல் 10 மணி முதல் 11.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றம் முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை இடம்பெறவுள்ளதுடன், அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு மாத்திரம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டாரவின் மறைவு தொடர்பான அனுதாபப் பிரேரணை பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் முற்பகல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினா நேரம் ஒதுக்கப்படாது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.