இம்ரான் கானிடம் 13 வயது இலங்கை சிறுவன், விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோள் [VIDEO]

இம்ரான் கானிடம் 13 வயது இலங்கை சிறுவன், விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோள் [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் -19 வைரஸ் தொற்றினால் இறக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை கட்டாய தகனம் செய்வதை நிறுத்தி அடக்கும் உரிமையினை பெற்றுத் தர, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை அரசுடன் தலையிட்டு உரிய தீர்வொன்றினை பெற்றுத்தருமாறு இலங்கையினை பிறப்பிடமாகக் கொண்ட 13 வயது சிறுவன் அம்மார் ரிஷாத் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, இன்றைய தினம் (22) அவரது உரையில் “..இலங்கை முஸ்லிம் சமூகம், மற்றைய சமூகங்களுடன் ஒன்றாக ஒற்றுமையாக இருக்கும் இந்நிலையில், தொற்றுக்குள்ளாகும் முஸ்லிம் ஜனாஸா எரிப்பு கொள்கையின் விளைவாக நமது முஸ்லிம் சமூகம் மிகவும் இன்னல்களுக்கு முகங் கொடுத்து வருகிறோம்..” மேலும், “.. நீங்கள் [இம்ரான் கான்] இந்த விடயத்தில் தலையிட்டு முடிவுகளை பெற்றுத் தருவீர்கள் என எமக்கு நம்பிக்கை இருக்கிறது..”

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை(23) இலங்கை வரவுள்ளார்.

கொவிட் -19 தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் பாராளுமன்றில் உறுதியளித்திருந்ததை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்றிருந்த நிலையில், அம்மார் ரிஷாடினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

“கொவிட் 19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களது உடல்களை அடக்கம் செய்ய இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை நாங்கள் வரவேற்கிறோம்” என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டுவிட்டர் பதிவொன்றினை பதிவு செய்திருந்தார்.

“கொவிட் – 19 தொற்றினால் இறந்த முஸ்லிம்களது ஜனாஸாக்களை அடக்கும் உரிமைகள் வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் அறிவித்த எங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வார்த்தைகளைப் பாராட்டும் உங்கள் அண்மைய டுவிட்டர் செய்தி, அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு உற்சாகத்தை வழங்கியிருந்தது..” என அம்மார் ரிஷாட் அவரது கோரிக்கையில் முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் அவரது கோரிக்கையில்;

“எனினும், அரசாங்கம் அன்று வழங்கிய வாக்குறுதியை மறுநாளே திரும்பப் பெற்றமை முஸ்லிம் சமூகத்தினை மிகவும் திகைப்புக்குள்ளாக்கியுள்ளது..”

“இலங்கை நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றவிருந்த உரையானது இரத்து செய்யப்பட்டதை நாங்கள் அறிவோம். நாடாளுமன்றத்தில் எழும் கொவிட் -19 தொற்றினால் இறக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமை தொடர்பிலான வாத பிரதிவாதங்கள் முன்மொழியப்படுவதாலும், அது குறித்து நீங்களும் சொற்பொழிவு ஆற்ற சாத்தியகூறுகள் அதிகம் உள்ளமையினாலேயே உங்கள் உரை இரத்தாகி இருக்கலாம் என யூகிக்கிறோம். இந்நிலையில் நீங்கள் எங்களது கோரிக்கையினை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் கோரிக்கையை நீங்கள் கவனித்து, எங்கள் தலைவர்களுடன் கொவிட் 19 இனால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்கும் செயற்பாட்டினை கலந்துரையாடி சாதகமான பதிலொன்றினை பெற்றுத் தருவீர்கள் என நாங்கள் நம்புகிறோம், ” என அம்மார் ரிஷாட் தெரிவித்துள்ளார்.

2021 பெப்ரவரி 16ம் திகதி அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட பயணத்திட்டத்தில் – பெப்ரவரி 24 அன்று “பாராளுமன்ற வருகை” என பட்டியலிடப்பட்டிருந்தாலும், மூத்த அரசாங்க அதிகாரிகள் இந்த முடிவுக்கு “கொவிட் -19 தடைகளை” மேற்கோள் காட்டி இதனை இரத்து செய்துள்ளனர்.

“மாண்புமிகு இம்ரான் கான், நீங்கள் உலகின் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் திறமையான மாநிலத் தலைவர்களில் ஒருவர். உங்களது இராஜதந்திரம் மற்றும் அரசியல்வாதியின் திறன்கள், உதாரணத்திற்கு வழிநடத்தும் உங்கள் திறனைப் போலவே, உலகெங்கிலும் உள்ள மக்களை உற்சாகப்படுத்தியுள்ளன. பாகிஸ்தானியர்கள், இலங்கையர்கள் மற்றும் உலகின் அனைத்து பகுதிகளிலும் உங்கள் புகழ், நீங்கள் செய்யும் ஒவ்வொரு பேச்சிலும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. நீங்கள் ஒரு புகழ்மிக்க சாம்பியன். நீங்கள் இலங்கையின் மிகவும் நம்பகமான நண்பர்களில் ஒருவராக இருக்கிறீர்கள், ”என13 வயதான அம்மார் ரிஷாத் தனது கோரிக்கை உரையில் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கும் போது, ​​ஒரு கிரிக்கெட் வீரர், உலகக் கோப்பை வென்ற தலைவர் மற்றும் ஒரு உலகத் தலைவராக, உங்கள் மனப்பான்மையிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்வோம். ஒருபோதும் பின்வாங்காதீர்கள் ” என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : UTV Tamil HD