குர்திஷ் போராளிகளின் கார் குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு…

குர்திஷ் போராளிகளின் கார் குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு…

சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் குர்திஷ் போராளிகளின் நடத்திய கார் குண்டு தாக்குதலில் துருக்கி நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிரியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான சண்டையில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவு படையில் குர்திஷ் இராணுவ குழுவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், தங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட குர்திஷ் தான் தொழிலாளர் கட்சியுடன் குர்திஷ் இராணுவ குழுவுக்கு தொடர்புள்ளதாக கூறி அந்த குழுவினரை தீவிரவாதிகள் என துருக்கி கூறுகிறது.

அத்துடன் தனது எல்லைப் பகுதியில் இருந்து குர்திஷ் ஆயுதக் குழுவை ஒழித்துக்கட்ட தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குர்திஷ் தரப்பும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. துருக்கி படையினருக்கு ஆதரவாக சிரியாவில் இயங்கி வரும் ப்ரீ சிரியன் ஆர்மி என்ற கிளர்ச்சிக்குழுவும் குர்திஷ் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இத்லிப் மாகாணத்தில் உள்ள துருக்கி இராணுவத்தினரை குறிவைத்து குர்திஷ் போராளிகள் நேற்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் துருக்கி நாட்டை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த தாக்குதலில் ஒரு இராணுவ வீரரும், ஒரு தொழிலாளியும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.