ஆடைத்தொழிற் துறை தயாரிப்பு மூலமான வருமானம் அதிகரிப்பு

ஆடைத்தொழிற் துறை தயாரிப்பு மூலமான வருமானம் அதிகரிப்பு

(FASTNEWS | COLOMBO) – நாட்டின் ஆடைத்தொழிற் துறை தயாரிப்பு மூலமான வருமானம் அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்தில் முதல் 7 மாத காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் இதே காலப் பகுதியில் இத்துறை மூலமான வருமானம் 9 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக ஒன்றிணைந்த ஆடைத் தொழிற்துறை அமைப்பின் செயலாளர் எம்.பி.ரி. குறே தெரிவித்துள்ளார்.

நாட்டின் வருடாந்த வெளிநாட்டு வருமானத்தில் 43 சதவீதம் ஆடைத் தொழிற்துறை ஏற்றமதி மூலம் கிடைக்கின்றது. வெளிநாட்டில் தொழில் புரிவோர் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் வருமானத்தில் இது இரண்டாவது இடத்தில் இடம் பெற்றிருப்பதாக குறே குறிப்பிட்டார்.

சீனா மற்றும் அமெரிக்கா இடையில் நிலவி வரும் வர்த்தக பிரச்சினையின் காரணமாக இலங்கை ஆடைத் தொழிற்துறை ஏற்றுமதிக்கு நன்மை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கை ஆகக் கூடுதலாக ஆடைத் தொழிற்துறை தயாரிப்புக்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இந்த ஏற்றுமதி துறையில் 2வது இடத்தில் ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஜி.எஸ்.பி பிளஸ் வரி நிவாரணம் கிடைத்தமையால் ஆடைத் தொழிற்துறை மூலமான வருமானம் அதிகரித்துள்ளது. இத் தொழிற்துறை தயாரிப்புக்களுக்கு சர்வதேச சந்தையில் பெரும் கேள்வி உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

பாரிய அளவிலான 350 ஆடைத் தொழிற்துறைகள் நாட்டில் செயற்படுகின்றன. இவற்றில் 4 இலட்சத்திற்கு மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். நேரடியாகவும் மறைமுகமாகவும் இத் தொழிற்துறை மூலம் நன்மை அடைந்து வருகின்றனர்.

மேலும் சர்வதேச உடன்படிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான சந்தர்ப்பத்தை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கத்தின தொழில்நுட்ப மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)