ஷாபி விவகாரம் – நாடகம் சஹ்ரானை நோக்கி திசை திரும்புகிறது
(ஃபாஸ்ட் நியூஸ் | குருநாகல்) – டாக்டர் ஷாபி (தொஸ்தர ஷாபி) இன்று இலங்கையில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது என்றே கூற வேண்டும். கடந்த ஏழு மாத காலமாக நாட்டின் பிரதான பேசு பொருள்களில் தவிர்க்கமுடியாத ஒரு பெயராக அது மாறியிருக்கின்றது. காரணம், ஒரு ‘கருத்தடை’ , வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக ஒரு குற்றச்சாட்டு. குற்றச்சாட்டைவிட, கருத்தடையினால் சாட்சிகள் இன்றியே ஷாபி டாக்டர் குற்றவாளியாக்கப்பட்டுவிட்டார்.
எப்போதும் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் செய்து நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் அவர் சந்தேக நபராக அறிவிக்கப்படுவதும், பின்னர் மேலதிக விசாரணைகளில் அல்லது வழக்கு விசாரணைகளில் சாட்சிகளின் அடிப்படையில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதுமே நியாயமான அல்லது சட்டத்தின் ஆட்சி இடம்பெறும் ஒரு நாட்டின் வழமையாக இருக்க முடியும். எனினும், ஷாபி டாக்டரின் விவகாரத்தில், அவர் சாட்சிகளின்றி குற்றவாளியாக முழுத் தேசத்துக்கும் அறிவிக்கப்பட்ட பின்னரேயே, அவருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஷாபி டாக்டருக்கு எதிராக தற்போது நியாயமாகவோ அநியாயமாகவோ இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஒன்று, வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை. மற்றையது, சிங்களப் பெண்களுக்கு சட்டவிரோதமாகக் கருத்தடை செய்தமை.
கடந்த மே மாதம் 23 ஆம் திகதி வெளியான திவயின தேசிய பத்திரிகையின் பிரதான தலைப்பு செய்தியானது, “சிசேரியன் சத்திர சிகிச்சைகளின் பின்னர் தெளஹீத் ஜமாஅத் டாக்டரால் சிங்கள பெளத்த தாய்மார் 4000 பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு” என வெளியாகியிருந்தது. இதுவே இந்த நாடகத்தின் உத்தியோகபூர்வ டீசராக அமைந்தது. உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்த போதும் அவ்வதிகாரியின் பெயர் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
எனினும், அந்த செய்தி வெளியானபோதும், இலங்கையில் எந்தவொரு பொலிஸ் நிலையத்தினாலும், சிறப்பு விசாரணையாளர்களினாலும் அவ்வாறு ஒரு விடயம் குறித்து எந்த விசாரணைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கவில்லை என்பதை அன்றைய தினமே பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர ஆகியோர் உறுதி செய்திருந்தார்.
இவ்வாறிருக்கையில் தான் திவயின செய்தியை உறுதி செய்வது போல அன்று மாலை ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர் சன்ன ஜயசுமன, ஷாபி டாக்டரின் புகைப்படத்தை பிரசுரித்து தனது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில், திவயின செய்தி சொல்லும் டாக்டர் இவர்தான் எனும் மாயையை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் மீள செய்தி வெளியிட்ட திவயின பத்திரிகை, தனது செய்தியை உறுதிசெய்ய குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டாரவையும் மேற்கோள்காட்டி அறிக்கையிட்டிருந்தது. இந்நிலையில் இந்தச் செய்தி பிரச்சினையாக நாடளாவிய ரீதியில் இனவாத சாயலுடன் தீயாய் பரவியது.
இந்நிலையில் திவயின பத்திரிகை செய்தி தொடர்பில், அந்த செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பில் சி.ஐ.டி. ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி கடந்த மே 25 ஆம் திகதி குறித்த செய்தியை எழுதிய ஊடகவியலாளரையும், அப்பத்திரிகையின் ஆசிரியரையும் விசாரித்து சி.ஐ.டி. வாக்குமூலம் பெற்றதுடன், செய்தியை வெளியிட்ட உயர் பொலிஸ் அதிகாரி யார் என்பதையும் வெளிப்படுத்திக்கொண்டது. அதன்படி குருநாகல் மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிரி ஜயலத்தையும் சி.ஐ.டி. விசாரித்துள்ளது.
கடந்த மே 25 ஆம் திகதியன்று ஷாபி டாக்டர் அவரது வீட்டில் வைத்து குருநாகல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். பொலிஸ் பேச்சாளரின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் பிரகாரம் அவர், வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டார்.
விசாரணைகள் நீளாமாகிக் கொண்டே சென்றதி இனவாத சாயலும் பூசப்பட்டது. இந்நிலையில் பலத்த கேள்விகளுக்கு மத்தியில் குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபிக்கு குருநாகல் நீதிமன்றம் கடந்த ஜூலை 25ம் திகதி பிணை அளித்தது. 250000 ருபாய் ரொக்கப் பிணையிலும் 2.5 மில்லியன் பெறுமதியான நான்கு சரீர பிணைகளிலும் செல்ல அனுமதித்த குருநாகலை பிரதான நீதவான் சம்பத் ஹேவாவசம் பிணையாளர்களை தமது வதிவிடத்தை உறுதி செய்யவேண்டும் எனவும் ஒவ்வொரு ஞாயிறு தினத்திலும் முற்பகல் 9 மணிக்கும் , நண்பகல் 12 மணிக்கும் இடையே குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் செப்டம்பர் 7ம் திகதியன்று நியமிக்கப்பட்ட புதிய ஆட்சியில் ஷாபியின் விசாரணைகளை மீளவும் ஆராயத் தொடங்கியது. குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் விசாரணைகளின் போக்கு திசை திரும்புவதாகவும் ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் முரணானது எனவும் தெளிவாக புலனாகிறது எனலாம்.
அதற்கு சான்று பகரும் விதத்தில் குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கில் நேற்று(16) பயங்கரவாதி சஹ்ரானின் பெயரால் பெரிதும் சர்ச்சை ஏற்பட்டதாக தெரிய வருகின்றது.
நேற்று(16) குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு நீதிவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது கருத்தடை விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தாய்மார்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாணக , சந்தேக நபரான ஷாபியை லாபிர் எனும் நபரொருவருடன் தொடர்புபடுத்தி முன்வைத்த கருத்தால் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வழக்கின் ஆரம்பத்தில், இந்த சந்தேக நபர் (ஷாபி) லாபிர் என்னும் சந்தேக நபருடன் தோன்றும் புகைப்படத்துடன் கூடிய இறுவெட்டொன்று சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த லாபிர் எனும் நபர் பயங்கரவாதி சஹ்ரானுடன் சத்தியப்பிரமாணம் செய்தவர் என்றும் அது குறித்து எந்த விசாரணையும் இல்லை எனவும் அந்த பின்னணியில் பங்கரவாத தடைச் சட்டம் ஷாபி விடயத்தில் நீக்கப்பட்டுள்ளதாகவும் சாணக தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கு வைத்தியர் ஷாபியின் சட்டதரணிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி நவரட்ன பண்டார இது கருத்தடை விவகாரம் குறித்த தாய்மார்களின் வழக்கு. பாதிக்கப்பட்டோர் தாய்மாரா? சஹ்ரானா? என கேள்வி எழுப்பினர்.
கடும் தொனியில் ஒரே நேரத்தில் இக்கருத்துக்கள் பரிமாறப்பட்ட நிலையில் மன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் , நீதிவான் சிறிது நேரம் அமைதிகாத்து நிலைமையை சரி செய்ததாகவும் வழக்கினை எதிர்வரும் மார்ச் 14ம் திகதி மீள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.