சவுதி அரேபியாவிற்கு அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல்

சவுதி அரேபியாவிற்கு அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல்

சவுதி அரேபியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தி, 171 பேரை கொன்று குவித்தது தொடர்பான வழக்குகளில் அல்கொய்தா மற்றும் பிற தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த 55 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற தீவிரவாத இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிற வகையில், இந்த 55 தீவிரவாதிகளுக்கும் ஒரே நேரத்தில், அதுவும் விரைவில் மரண தண்டனையை நிறைவேற்ற சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இது அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தின் சார்பில் ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் நேற்று ஒரு எச்சரிக்கை அறிக்கை விடப்பட்டுள்ளது.

அதில், “எங்கள் இயக்கத்தினரின் மரண தண்டனையை மொத்தமாக சவுதி நிறைவேற்ற எண்ணி இருப்பது எங்களுக்கு தெரியும், எங்களது கைதிகள் ரத்தம் சிந்துவதற்கு முன்பாக நாங்கள் ரத்தம் சிந்துவோம். அவர்களது புனித ரத்தம் காய்வதற்கு முன்பாக, சவுதி படையினரை ரத்தம் சிந்த வைப்போம். எங்கள் இயக்கத்தினரை கொன்றால், உங்களை கொல்வோம். சவுதி ஆட்சியாளர்களின் தலைகள் எங்கள் கைக்கு வராத வரையில் நாங்கள் வாழ்க்கையை அனுபவிக்க மாட்டோம்” என கூறப்பட்டுள்ளது.